இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்று அரசு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 12ஆம் தேதி அதிகாலை விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது விசைப் படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் சிறைபிடித்த மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகள் இடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
இந்நிலையில், இலங்கை நீதிமன்றம் கடந்த 28 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. தூதரக அதிகாரிகள் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரும், விமான மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக 6 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேடை வழங்கி, அவர்கள் கொழும்பிலிருந்து, சென்னை வருவதற்கான விமான டிக்கெட்களும் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு, இலங்கையில் இருந்து சென்னை வரும் ஏர்இந்தியா விமானத்தில், ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த ராமேஸ்ரம் மீனவர்கள் 6 பேரையும், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் 6 மீனவர்களும், ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.