தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் அனைத்து மாவட்ட சுகாதார மையங்களும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்துகள் மற்றும் பட்டாசு தொடர்பான காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து, மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம் ஆகும். தமிழகத்தில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டால், dphepi@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டும்.
அத்துடன், மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிக்க வேண்டும். இன்றும் (அக்டோபர் 19) நாளையும் (அக்டோபர் 20) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் உடனடியாக பணியில் ஈடுபடும் வகையில் அருகில் தங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என சோமந்தரம் தெரிவித்துள்ளார்.