அதிமுக வழக்கு- பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பதில்
அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச் 28 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவின் எட்டாவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக உறுப்பினர் என்ற முறையில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை ரத்து செய்ய ராம்குமார் ஆதித்தன் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனுதாக்கல் செய்தது. அந்த பதில் மனுவில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது, அதிமுக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புதான் இறுதி முடிவு என்பதை தாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதால் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையிலான வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.