பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட அண்ணாமலை!
பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்று (01.02.2023) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது “மாநிலத் தலைவராக இல்லை என்றால் பாஜகவில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பிருக்கிறதா?” என்ற கேள்வியை பெண் பத்திரிகையாளர் ஒருவர் முன்வைத்தார். உடனே அந்த பெண் பத்திரிகையாளரை, தனக்கு அருகில் வந்து நிற்கும் படி அழைத்ததன் மூலம் தரம் கெட்ட, கீழ்த்தரமான, மூன்றாம்தர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் அண்ணாமலை.

இந்த கேள்வி எந்த வகையிலும் அறம் தவறிய கேள்வியோ, ஒரு தனி நபரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கேள்வியோ, ஒரு அரசியல் கட்சித் தலைவரின் குடும்ப விவகாரம் தொடர்பான கேள்வியோ, கேட்கவே கூடாத அல்லது கேட்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத கேள்வியோ கிடையாது என பத்திரிக்கையாளர்கள் சங்கங்ககள் கொதித்தெழுந்துள்ளன.
அண்ணாமலை பாஜகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது தொடங்கியே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடங்கி, கட்சியின் மூத்த தலைவர்களையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் மதிக்காமல் செயல்படுகிறார் என்றும், கொடூரமான குற்றப் பின்னணியைக் கொண்டவர்களை கட்சியில் சேர்க்கிறார் என்றும், பெண்களை பயன்படுத்தி கட்சியில் தனது பொறுப்பை காப்பாற்றிக்கொள்கிறார் என்பதுவரையிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது உலவி வந்துள்ளது.
இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை அளந்துவிட்ட பொய், அதிமுகவை கோபப்படுத்தியதும், அதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதையும் நாம் அறிவோம். ஆகவே, அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால், அவர் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி மீண்டும் அரசியல் வட்டாரத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தனது நடைபயணத்திற்கு இடையில் அண்ணாமலை டெல்லி புறப்பட்டுள்ளார்.