ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படுமென அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் பணியிடங்களுக்கு விளம்பரம் வெளியிடப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலமே ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதை போல் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் 20ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு எடுத்த முடிவின்படி, புதிதாக மேற்கொள்ளப்படும் உதவி பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடம், ஆசிரியரல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படுமெனவும், ஏதேனும் திட்டங்களுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டால் தினக்கூலி அல்லது தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை திட்ட காலம் முடியும் வரை பணியில் அமர்த்தலாமெனவும், துறையில் கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றினால் அவர்களை பணியாளர் குறைவாக இருக்கும் வேறு துறைகளுக்கு பணியமர்த்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஆசிரியரல்லாத பணியிடங்களில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர் உள்ள நிலையில், இனி உதவி பேராசிரியர்களும் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்..
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள மறு சுற்றறிக்கையில், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மட்டுமே அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், பேராசிரியர் உதவி பேராசிரியர் போன்ற ஆசிரியர் பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுற்றறிக்கையில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட மந்தனத்தன்மை மிகுந்த ரகசியம் காக்கப்பட வேண்டிய இடங்களில் எப்போதுமே அவுட்சோர்சிங் முறையில் எந்த பணியிடங்களும் நிரப்பப்படாது என்றும் பதிவாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் நியமிக்கக் கூடாது என இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தேன் . அண்ணா பல்கலை.யில் குத்தகை முறை ஆசிரியர்கள் நியமனம் கைவிடப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி:
இது குறித்து டாக்டா்அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதைக் கண்டித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டும் தான் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டதில் மகிழ்ச்சி தான். ஆனால், செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது உண்மை. அதற்கு நான் கண்டனம் தெரிவித்த பிறகு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தான் அண்ணா பல்கலைக்கழகம் அதன் முடிவை மாற்றிக் கொண்டது.
ஆனால், நிதிக்குழு தீர்மானத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சுற்றறிக்கையில் தான் ஆசிரியர்கள் என்ற சொல் தவறுதலாக இடம் பெற்று விட்டது போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முயன்றுள்ளது. அதுமட்டுமின்றி அதன் தவறு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக புதிய சுற்றறிக்கை நேற்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடி ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பழைய சுற்றறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி கண்டித்திருக்காவிட்டால், ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை திணிக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், குட்டு அம்பலமான பிறகு எதுவுமே நடக்காதது போன்று அண்ணா பல்கலைக்கழகம் நாடகமாடுகிறது. இது தவறு. ஓர் உயர்ந்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது.
தொழில்நுட்ப உயர்கல்வியை கேலிக்கூத்தாக்கக் கூடாது! – அன்புமணி இராமதாஸ்