செந்தில்பாலாஜி புத்தர்? ஆளுநர் வில்லனா?- அண்ணாமலை ஆவேசம்
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என நானே கூறியுள்ளேன், ஆனால் ஜி.யூ.போப் மொழியாக்கம் செய்த திருக்குறள் குறித்து பேசியிருப்பது ஆளுநரின் சொந்த கருத்து என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “ஜனாதிபதிக்கு முதல்வர் எழுதிய கடிதம், அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது. லும் முதல்வர் கண்ணாடியில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என்பது போன்ற வகையில் அவரது கடிதம் உள்ளது. ஆளுநர் அமைச்சரை நீக்கம் செய்வது குறித்து கூறுகிறார்கள், ஆனால் அது டெக்னிக்கல் பிரச்சனை, அது குறித்து ஆராய நேரமும், காலமும் உள்ளது. மேலும் தமிழகத்தில் ஆளுநரை மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள், ஆளுநர் இவர்கள் எழுதிகொடுப்பதை தான் பேச வேண்டும் என சட்டம் உள்ளதா?
நான் கொடுத்ததை ஆளுநர் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறுகிறார்கள். எங்கே எல்லாம் பொய் இருக்கிறதோ அங்கே உள்ளதை ஆளுநர் படிக்கவில்லை, அவ்வாறு இல்லாததை கூறினால் ஆளுநர் கிளிப்பிள்ளையை போல ஆகிவிடுவார். கடிதத்தில் முன்னுக்கு பின் முரணாக நிறைய கருத்துகள் உள்ளது. கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள போவது கிடையாது. மேலும் வரும் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும், மூன்றாவது முறையாக தற்போதைய பிரதமர் ஆட்சியமைக்க போகிறார். அந்த இயலாமையை தான் முதல்வரின் கடிதம் காட்டுகிறது.


சிதம்பரம் கோவில் விவகாரத்தில், இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் மட்டும் கூறவில்லை, அங்கு விசாரணை மேற்கொண்ட, மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் கூறியது. அதில் தவறு என ஆளுநர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என நானே கூறியுள்ளேன், ஆனால் ஜி.யூ.போப் மொழியாக்கம் செய்த திருக்குறள் குறித்து பேசியிருப்பது ஆளுநரின் சொந்த கருத்து. ஜி.யு.போப் திருக்குறளை மொழி பெயர்த்ததில் சில இடங்களில் தவறு இருக்கிறது
செந்தில்பாலாஜியை புத்தராகவும், உத்தமராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர். தங்கள் தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சிக்கின்றனர். திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப்பார்க்கிறது. ஆளுநரை ஒருமையில் பேசி தரக்குறைவாக விமர்சிப்பது மிகவும் தவறானது” என்றார்.