
சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. 10 கி.மீ. வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல் நாளை (டிச.05) ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும். இன்று முற்பகல் புயல் தீவிரமடையும்; கனமழை இன்றிரவு வரை தொடரும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச.04) பகல் 01.00 மணி வரை தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே, மழை முன்னெச்செரிக்கை குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநகராட்சிப் பகுதியில் பெய்த மழை, எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தொலைபேசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
சென்னை மீனம்பாக்கத்தில் மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காலை 08.30 மணியுடன் மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர் கனமழை காரணமாக, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அன்னனூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், சேக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
மிக்ஜம் புயல் எதிரொலி… தற்காலிகமாக மூடப்படும் சென்னை விமான நிலையம்!
வெள்ளம் செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜமாலியா, வீனஸ், அகரம், பேப்பர் மில்ஸ் ரோடு பகுதிகளிலும் மழைநீர் சூழந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.