மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின்
நீர்த்தேக்கக் கொள்ளளவினை மேம்படுத்தும் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: – 2020-2021ஆம் ஆண்டில் நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின் கொள்ளளவு மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு அரசாணை (நிலை) எண். 70, 26.07.2024 அன்று வெளியிடப்பட்டது.


இந்த அரசாணையில் 4 அணைகளின் தூர்வாரும் பணிகளுக்கான சட்டரீதியான அனுமதி (Statutory Clearances) மற்றும் ஆலோசனைக் கட்டனம் (Consultancy Charges) ரூ.3.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தகுந்த ஆலோசனை முகமைகளை தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, வைகை மற்றும் அமராவதி அணைகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் முறையே 13.11.2024 மற்றும் 20.11.2024 அன்று திறக்கப்படவுள்ளது.

மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைக்கான ஒப்புந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நீர்வளத்துறையின் பரிசீலனையில் உள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டவுடன் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு 4 அணைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


