திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீக்காக உள்ளார் என்பதை காட்டுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர் அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் எடப்பாடி பழனிசாமி பலவீனமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி, வலுவான கூட்டணி, இது மக்களுக்காக உழைக்கும் கூட்டணி. அதிமுக கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, அது உருப்படாது, தேறாது.
பாஜகவினர் கூட்டணி ஆட்சி தான் அமைக்கும் என்று சொல்கிறார்கள், பழனிச்சாமி நான்தான் முதல்வர் என்று சொல்கிறார். தனித்து ஆட்சி அமைப்போம் என்று இதுவரை சொல்லவில்லை. அவர்களுக்குள்ளேயே குழப்பம் நிலவுகிறது. இது தேர்தலுக்குப் பிறகும் நிலவும். 2026-இல் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக வந்தாலும் சரி, திமுக ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. திமுக தொண்டர்கள் கையில் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகராஜா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.