ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு அருகே வேப்பாம்பாளையத்தில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்றி வருகின்றனர். இந்த கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கர்நாடகாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி கல்லூரி சார்பில் அந்த சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று இரவு கல்லூரியில் இருந்து புறப்பட்டனர். அந்த பேருந்தில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என சுமார் 50 பேர் பயணித்துள்ளனர். அந்த பேருந்து கல்லூரியில் இருந்து 500 மீட்டர் தொலைவே சென்ற நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஸ்வேதா என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக பேருந்தில் இருந்து மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.