மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மிக மிக அவரியம். மத்திய அரசின் மேற்கொண்டுள்ள தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில்தான் இருக்கும்’என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தொகுதிகளை மாற்றியமைப்பது மத்திய அரசின் அரசியலமைப்பு சட்டப் பொறுப்பு என்றும், இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்கி வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் தொடர்ந்து வெளியிடும் கருத்துக்கள் அவரது அரசியல் பதற்றத்தையும், தோல்வி பயத்தையும் காட்டுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாறும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியம் என வலியுறுத்திய அவர், தற்போதைய சூழலில் ஒரு தொகுதிக்கு 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பது பிரதிநிதித்துவ சீர்கேட்டை உருவாக்கும் என்றார். இதனை சரிசெய்வதற்காகவே தொகுதி மறுவரையறை அவசியம் எனவும் தெரிவித்தார்.
வரலாற்று புள்ளிவிவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். 1950ஆம் ஆண்டு சுமார் 36 கோடி மக்கள் தொகையுடன் 489 மக்களவை உறுப்பினர்கள் இருந்த நிலையில், 1970ஆம் ஆண்டில் மக்கள் தொகை உயர்ந்தபோது 543 இடங்களாக உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடியை எட்டியுள்ள நிலையில், அதே எண்ணிக்கையே தொடர்வது பொருத்தமற்றது என அவர் வாதிட்டார்.
மேலும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது நீண்டகால கோரிக்கை என்றும், அதை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திலேயே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியிருப்பது பெண்களின் அரசியல் முன்னேற்றத்திற்கு முக்கியமான படியாகும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மாறாக, காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் இந்த முயற்சியையே அரசியலாக்கி வருகின்றன என குற்றம்சாட்டிய அவர், பெண்கள் அதிகமாக பிரதிநிதித்துவம் பெறும் அவையை உருவாக்க விரும்பவில்லை என்பதால்தான் அவர்கள் எதிர்க்கின்றனர் என்றார்.
அதேசமயம், தொகுதி மறுவரையறை காரணமாக எந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் குறையாது என பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டு மக்களுக்கு பாதகமாக அல்ல, மாறாக நன்மை தரும் வகையிலேயே அமையும் என்றும், இதனை தவறாக விளக்கி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது தேவையற்ற அரசியல் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
