காமராஜர் பிறந்தநாள்- தலைவர்கள் மரியாதை
தமிழகத்தின் கிங் மேக்கர் என்று அனைவராலும் அழைக்கப்படும் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, பல்வேறு தலைவர்கள், அவரத் சாதனைகளை நினைவுக்கூறுவதுடன், மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எளிமை, நேர்மை இவையே தனது கொள்கையென கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்ந்த கர்ம வீரர், கல்விக் கண் திறந்த தர்ம சீலர், மக்கள் மனதில் என்றும் நீங்கா புகழ் கொண்ட போற்றுதலுக்குரிய அய்யா திரு.காமராஜர் அவர்களின் 121 ஆவது பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்கி, சென்னை பசுமை வழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவரும், தொழில் வளர்ச்சியை உருவாக்கியவருமான கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டுச் சேவைக்கெனத் தம்மை அர்பபணித்துக் கொண்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள் எந்நாளும் இந்திய மக்களின் இதயங்களில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார். அவரின் தியாகத்தையும், சேவையையும் போற்றுவோம்” என பதிவிட்டுள்ளார்.
சபாநாயகர் அப்பாவு, “கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு, இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, வள்ளியூர், திசையன்விளை பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும், பணகுடியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், “அனைவருக்கும் சுகமான, சுமையற்ற, தரமான கல்வி காமராசரின் பிறந்தநாளில் உறுதியேற்போம்; அவரது பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்! தமிழ்நாட்டில் அரசியல், சமூக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த கர்மவீரர் காமராசருக்கு இன்று 121ஆம் பிறந்தநாள். ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசக் கல்வி, குலக்கல்வி என்ற முறையில் பறிக்கப்பட்ட நிலையில், புதிய பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.
கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகிய துறைகளிலும் எண்ணிலடங்காத திட்டங்களை செயல்படுத்திய விருதுப்பட்டி வீரர் அவர். அவரது பெருமைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதற்காக அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்கும் நிலையை உருவாக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.