கடந்த ஆண்டை விட டெங்கு, மலேரியா பாதிப்பு குறைவு- ஈபிஎஸ்க்கு மா.சு.பதில்
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1021 மருத்துவர்கள் மற்றும் 2049 மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களுக்கு எம்ஆர்பி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரக டயாலிசிஸ் பிரிவு, அதி நவீன மூளை நரம்பு மின்காந்த சிகிச்சை பிரிவு ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூளைச் சாவு நபரிடம் இருந்து உறுப்பு தானம் குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “60 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறுநீரக டயலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் சிகிச்சையில் தினமும் 120 பேர் என, மாதம் 3000 பேர் வரை பயன்பெறுவார்கள். எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டயலிசிஸ் செய்ய ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொண்டு வரப்பட்டது போலவே, கல்லீரல் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும் டயாலிசிஸ் செய்து கொள்ள பிரிவு இங்கு துவங்கப்பட்டுள்ளது. 27 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு உறுப்பு தானம் பெற உரிமம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகமான உறுப்பு தானம் பெறும் உரிமம் கொண்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை சிறப்பாக மேற்கொண்ட கல்லூரி முதல்வருக்கு முதலமைச்சரால் விருது வழங்கப்படும். மேலும், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எம்ஆர்பி மூலம் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுநர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணி அமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் அடிப்படையில் மாவட்ட சுகாதார மையங்களில் பணிபுரிவதற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கி பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பணி நியமனங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. நகர்ப்புற நல் வழ்வு மையங்களில் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது” என்றார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் குறித்த கேள்விக்கு , தமிழகத்தில் சிக்கன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்களால் பதற்றம் இல்லை. எடப்பாடி பழனிசாமி தான் எப்போதும் போல தேவையற்ற பதற்றத்தில் உள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்தார்.