கனமழையால் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டதை அடுத்து 2 நாட்களுக்கு பின்னர் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த அக்டோபர் 16, 17ஆம் தேதிகளில் மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கனமழையால் மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததாலும், மழையின் தீவிரம் குறைந்ததாலும் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலைரயில் சேவை 2 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இன்று தொடங்கும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, மேட்டுப்பாளையம் – உதகை மற்றும் உதகை – மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட மலை ரயிலில், ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.