முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை அனுப்பி வைத்த கே.என். நேரு.
முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேருவின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கோடியம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் திருநாவுக்கரசு (22) திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி பயோ டெக்னாலஜி வருகிறார். இவர் தனது பைக்கில் முசிறி நோக்கி வந்த போது குறுக்கே ஒரு வாகனம் வந்துள்ளது. இதனால் திருநாவுக்கரசு பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இவரது பைக் சறுக்கியது. இதில் வாலிபர் கீழே விழுந்ததால் காயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் காரை நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு காயம் அடைந்த வாலிபர் திருநாவுக்கரசை மீட்டு தனது பாதுகாப்புக்காக வந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
காயமடைந்த வாலிபர் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று முசிறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்த நேரத்தில் அங்கு வந்த அமைச்சர் நேரு 108 ஆம்புலன்ஸ் வரும் என காத்திருக்காமல் உடனடியாக தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.