தமிழ்நாட்டில் பல நிறுவனங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குகிறார்கள் அதில் அரசு தலையிட்டு நெறிமுறை படுத்த வேண்டும் எனவும் அமைச்சரவையை மாற்றுவது, அமைச்சர்களை நியமனம் செய்வது, திருத்தி அமைப்பது என அனைத்து உரிமையும் முதல்வருக்கு உண்டு முதல்வர் தனது கடமையை செய்கிறார் அதை விமர்சிப்பதற்கு மற்றவர்களுக்கு தகுதி கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளாா்.மே மாத முதல் நாள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு கட்சி கொடி ஏற்றி வைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியிருப்பதாவது, ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மே தின புரட்சிகர நாள் வாழ்த்துகள். 139 ஆவது மே தின விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்றைய தினம் விடுதலை போராட்ட வீரரும், தகைசால் தமிழருமான நல்ல கண்ணு ஐயா செங்கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகில் கொண்டாடப்படும் பண்டிகைகளை விட உழைக்கும் மக்கள் அனைவரும் சாதி மதம் அரசியல் என அனைத்து வேறுபாடுகளையும் கலைத்து கொண்டாடுகிற மாபெரும் விழாவாக மே தின விழா கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் மக்களுக்கு வேலை நேரம் கணக்கு வழக்கு இல்லாமல் இருந்த நிலையில் அதை முறைப்படுத்த தொடங்கிய போராட்டம் தான் மே தின போராட்டம். எட்டு மணி நேரம் வேலை ,எட்டு மணி நேரம் உறக்கம், எட்டு மணி நேரம் உல்லாசம் என 24 மணி நேரத்தை வகுத்து வலியுறுத்திய போராட்டத்தின் வெற்றிதான் மே தின கொண்டாட்டம். தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் சந்தித்து வருகிறார்கள். பாஜக அரசு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து வருகிற மே 20ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தை தொழிற்சங்க அமைப்புகள், விவசாய சங்க அமைப்புகள், விவசாய தொழிலாளர்கள் சங்க அமைப்புகள் அனைவரும் இணைந்து நடத்த உள்ளோம்.
தமிழ் நாட்டிலும் இந்த போராட்டத்தை சிறப்பாக நடத்த உள்ளோம். தமிழ்நாட்டில் பல நிறுவனங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குகிறார்கள் அதில் அரசு தலையிட்டு நெறிமுறை படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் என ஊதிய அளவை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும்.
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். சாம்சங் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த முறையில் அரசு வேலையில் ஊழியர்களை பணியமர்த்தக் கூடாது, நிரந்தர பணியை அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் , அதற்கு முன்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மேற்கொண்டால்தான் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும். அரசு மேற்கோள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நீண்ட கால கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளார்கள். சகோதரி தமிழிசை எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை, இவர் முதல்வர் வெற்றி பெறுவாரா என கேள்வி கேட்பதா?
ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வர் வெற்றி பெறுவாரா என்பதை கூற தமிழிசை சௌந்தரராஜனுக்கு எந்த தகுதியும் இல்லை. அமைச்சர்களை நியமனம் செய்வது, மாற்றுவது, திருத்தி அமைப்பது என்ற உரிமை முதல்வருக்கே உண்டு. முதல்வர் தனது கடமையை செய்வதை விமர்சிப்பதற்கு மற்றவருக்கு உரிமை கிடையாது.
மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்