“ஆப்ரேஷன் காவிரி” – இந்தியர்கள் தொடர்ந்து மீட்பு
உள்நாட்டுப் போர் நடக்கும் சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 8 தமிழர்கள் விமான மூலமாக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து அடைந்தனர்.
ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நடக்கும் சூடானில் சிக்கி இருக்கும் சுமார் 4000 இந்தியர்கள் ஆபரேஷன் காவிரி திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு சூடானிலிருந்து மீட்கப்பட்டு சென்னை, மதுரை விமான நிலையங்களுக்கு அழைத்து வரப்படும் தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அயலகத் தமிழர் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் மும்பையிலிருந்து விமானம் மூலமாக சென்னையைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 8 பேர் சென்னை விமான நிலையம் வந்து அடைந்தனர்.
இதனை அடுத்து தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உதவியால் 4 நாட்கள் தொடர் பயணத்திற்கு பின்னர் நாடு திரும்பி இருப்பது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்த அவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் செய்து தந்ததாக நன்றி தெரிவித்தனர். மீண்டும் சூடானில் பணிக்கு திரும்புவது குறித்து சூழல் தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.