Homeசெய்திகள்தமிழ்நாடுபற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.

பற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.

-

- Advertisement -

பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூர தண்டனை கொடுத்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதலில் தாக்கப்பட்டதாக புகார் அளித்தவர் கீழே விழுந்ததில் தனது பல் உடைந்ததாக கூறியிருக்கிறார்.

நெல்லை சார் ஆட்சியர்

இதனிடையே இந்த சம்பவத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய தினம் மட்டும் 6-க்கும் மேற்பட்ட நபர்கள் தாங்களும் பாதிக்கப்பட்டதாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று சார் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருப்பின் வரும் ஏப்ரல் 10-ந்தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கே வந்து புகார்களை தெரிவிக்கலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் விசாரணை அதிகாரியும், சேரன்மாதேவி சார் ஆட்சியருமான முகமது சபீர் ஆலம் தெரிவித்திருக்கிறார்.

MUST READ