உலகிலேயே அரசியலை ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஆக்கிய ஒரே ஆள் விஜய் தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் கூறியுள்ளார்.
கலைஞர், எம்ஜிஆர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனாலும், அவர்கள் ஒரே நாளில் முதலமைச்சர் ஆகிவிடவில்லை.

கலைஞரும், எம்ஜிஆரும் திராவிட முன்னேற்றக்கழகத்தில் ஆரம்பத்தில் இணைந்து பணியாற்றி கட்சியை வளர்த்தவர்கள். மக்களை நேரில் சந்தித்தார்கள். அதுபோல ஜெயலலிதா கூட மக்களை நேரில் சந்தித்தார். மு.க.ஸ்டாலின் திடீரென ஒரே நாளில் முதலமைச்சர் ஆகிவிடவில்லை.
பல தடைகளை, போராட்டங்களைக் கடந்து வந்தவர் அவர். அதோடு, மக்களோடு மக்களாக இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சினிமாவில் நடித்தாலும் அரசியலிலும் ஈடுபட்டு மக்களை நேரில் சந்தித்தவர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒற்றைச் செங்கலை கையில் வைத்துக் கொண்டு திமுக வை மாபெரும் வெற்றி பெறச்செய்தவர். இன்றைக்கும் அவர் மக்களை நேரில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். மேலே சொன்ன இந்தத் தலைவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக கலந்திருந்ததால் தான் அவர்களால் அரசியலில் நிலைபெற முடிந்தது.
ஆனால், சினிமாவில் ஒரே பாடலில் கோடீசுவரர் ஆவது போல், இன்றைக்கு ஒரே நாளில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பலரும் கனவு காண்கிறார்கள். அதுவும் நடிகர் விஜய்யோ முதலமைச்சர் ஆகிவிட்டதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆரை விட தான் பெரிய சக்தி என்று நினைத்து, வெளியே வந்து மக்களைச் சந்திக்கக்கூட மறுக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க மாட்டாராம். அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்து நிவாரண உதவி அளிப்பாராம்.
அதேசமயம், நடிகையின் திருமணத்தில் விமானத்தில் பறந்துபோய் கலந்து கொள்வாராம். தான் நடத்திய கட்சி மாநாட்டுக்கு வந்த 5 தொண்டர்கள் இறந்ததற்கு 2 நாட்கள் வரை ஒரு இரங்கல் கூட விஜய் தெரிவிக்கவில்லை. ஆனால், ஒரு நடிகையின் நாய் இறந்ததற்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவிக்கிறார். நாயை விட தன் தொண்டர்களை கேவலமாக மதிக்கும் ஒரு நபரால் மக்களை எப்படி நேசிக்க முடியும்? அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை காவல் துறையினர் உடனே கைது செய்துவிட்டார்கள். சம்பவம் நடந்து பல நாட்கள் தூங்கிக் கொண்டிருந்தார் போலிருக்கிறது.
திடீரென விழித்து, பெண்களுக்கு தானே பாதுகாப்பு என்பது போல் கைப்பட எழுதி அறிக்கை வெளியிடுகிறார். அதை வைத்து கீழ்த்தரமான அரசியலை செய்ய நினைக்கிறார். இவர் நடித்த படங்களில் பெண்களை எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தியிருப்பார் என்பதை அனைவரும் அறிவர். பெண்களை உயர்த்தி எந்தப் படத்திலாவது நடித்திருப்பாரா? பெண்களைப் படத்தில் பகடைக்காய்களாகவும், கவர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்தியிருப்பார். இவர், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கப் போகிறாராம்.
இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை இதுவாகவே இருக்கும். அப்படியே மனுவை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் விரோதியாகச் செயல்படும் ஆளுநர் ரவியைச் சந்தித்திருக்கிறார். அதாவது, பூனை வெளியே வந்துவிட்டது. திமுகவுக்கு எதிராக விஜய் செயல்படுவது பாஜகவின் கண் அசைவில் தானோ என்ற சந்தேகம் யாருக்கும் எளிதில் எழும். முதல் மாநாட்டில், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கர்ஜித்தவர், இரண்டே மாதத்தில் ஆளுநரிடம் சரணடைந்தது ஏன்? நலன் விரும்பி என்றால், முதலமைச்சரைத் தான் சந்தித்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.
ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? யார் உத்தரவிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரைச் சந்தித்தீர்கள்? அரசியலையும் சினிமாவைப் போல் நினைத்துக் கொண்டிருக்கிறார் விஜய். அரசியல் களமும் போர்க்களமும் ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். இங்கு வசனம் பேசிவிட்டு கடந்து போக முடியாது. களத்தில் நின்று போராட வேண்டும். தினமும் மக்களைச் சந்திக்க வேண்டும். திரைப்படத்தில் எழுதிக் கொடுக்கும் வசனத்தைப் பேசிவிட்டு, சண்டை போடுவது போல் நடித்துவிட்டுப் போய்விடலாம்.
தேவைப்பட்டால் டூப் கூட போட்டுக் கொள்ளலாம். ஆனால் அரசியலில் அது முடியாது விஜய். மக்கள் பிரச்சினைகளுக்கு இறங்கி வந்து போராட மாட்டீர்கள், மக்களைச் சந்திக்க மாட்டீர்கள் என்றால், யாரைத் திருப்திப்படுத்த அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள்? யாருடைய தாளத்துக்கு ஆடுகிறீர்கள்? இந்தக் கேள்விக்கெல்லாம் நீங்கள் விரைவில் பதில் சொல்லியே ஆக வேண்டும். விசில் அடித்துவிட்டுக் கலைந்து போய்வதற்கு இது சினிமா அல்ல…தொண்டர்களை அரவணைத்து களத்தில் நிற்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வராமல் அரசியல் செய்வதற்கு, இது என்ன ‘ஒர்க் ஃப்ரம் ஹோமா’? இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அரசியலை ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஆக்கிய ஒரே ஆள் விஜய் தான்.