ஜூன்-4 ம் தேதிக்கு பிறகு ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?
ஆவடி சட்டமன்றத் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா அல்லது கிடைக்காதா? என்று ஆவடி பகுதி திமுகவினர் விவாதித்து வருகின்றனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அப்பொழுது முதலமைச்சருடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில் ஆவடி சா.மு.நாசர் பால் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அமைச்சரவையில் அவருக்கு 27 வது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் பதவியின் அனுபவம் இல்லாத காரணத்தினாலும், சரியான நபர்களின் ஆலோசானையை காது கொடுத்து கேட்காமல் போனதாலும் இரண்டாண்டு காலத்தில் அமைச்சரவையில் இருந்து 2023-மே 9 ஆம் தேதி நீக்கப்பட்டார்.
ஆவடி நாசரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து சரியாக ஓராண்டு ஆகிறது. இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் அவர் மனரீதியாக நிறைய பாதிப்படைந்து விட்டார். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்து வெளிப்படையாக கட்சி பிரமுகர்களை, பொதுமக்களை சந்திப்பதற்கு ஆறுமாதம் தேவைப்பட்டது. அதன் பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு மக்களை சந்திக்கவும், அவர்களிடம் பேசவும் செய்தார்.
தற்போது ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு மீண்டும் அமைச்சர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் விவாதித்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றார். அப்பொழுது நாசரும் கொடைக்கானல் சென்று வந்தார். அப்பொழுது மீண்டும் அமைச்சர் பதவி குறித்து பேசப்பட்டதாக ஆவடி திமுகவினர் பேசி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் திமுக தலைமை முடிவெடுக்க வேண்டும்.