தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் செங்கம் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அதாவது கார்த்திகை தீப திருவிழாவின் போது அகல் விளக்கும், பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பானையும் தயாரித்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருவதாக கூறி வருகின்றனர்.
செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் பருவமழை நன்றாக பெய்து இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை பணிகளை முடித்து நல்ல முகசூல் பெற்ற நிலையில் நெல் மூட்டை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழாவை புது பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு பங்களிப்பு உணவளித்து மகிழும் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகள் அதிக அளவில் பொங்கல் பானைகளை வாங்கி செல்வார்கள் என்ற நம்பிக்கையில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.