மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது.

இதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியிலிருந்து 26 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 93.47டி எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து சரிவடைந்ததை அடுத்து மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 26,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்படும் நிலையில், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 4,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.