சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன பணியாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராடி வரும் தொழிலாளர்களுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், தொழிலாளர் போராட்டத்திற்கு விரைந்து தீர்வுகாண மைச்சர்கள் தாமோ அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தி இருந்தார். இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடந்த 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ அன்பரசன், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஏ.சி பேருந்துகளை அதிகப்படுத்துதல், இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக 5000 ரூபாய் அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை வழங்குவது நடைமுறையில் இருக்கும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டார். சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை அங்கிகரிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், அரசின் கோரிக்கை ஏற்று வேலைக்கு திரும்புவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.