மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு எஸ்.ஸி சலுகைகள் – முதல்வருக்கு நன்றி
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மக்களுக்கும் பட்டியல் இனத்தவர்(SC) அந்தஸ்து, சலுகைகள், உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானமாக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.


இது சாதி வேற்றுமையால் ஒடுக்கப்படும் தலித் கிறிஸ்தவ மக்களின் சமூக நீதிக்கான வரலாற்று சிறப்புமிக்க தீர்மானமாகும். இதை பாராட்டி செய்தியாளர் சந்திப்பு வாயிலாக அவருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
தலித் கிறிஸ்தவர்களுக்கு கடந்த 72 ஆண்டுகளாக அரசியல் சாசன பட்டியல் இனத்தவர்(Sc) அந்தஸ்தும், உரிமைகளும் மறுக்கப்பட்டுவருகிறது .
அரசியல் சாசன் ஆணை(SC) 1950, பத்தி-3 படி இந்து மதத்தை சேர்ந்த தலித் மக்களுக்கு மட்டுமே இந்த உரிமை கொடுக்கப்பட்டது. பின்னர் 1956ல் சீக்கிய மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கும், 1990ல் பௌத்த மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கும் இந்த உரிமை வழங்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை தலித் கிறிஸ்தவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டு வருவது மதத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு காட்டி வரும் பாரபட்சம் மற்றும் அநீதி அரசியல் ஆகும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மதசார்பற்ற அடிப்படை கொள்கைக்கு இது எதிரானது. இது தொடர்பாக 2004ல் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு(WP No.108/2004) தற்போது மூன்று நீதியரசர்களை கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.
ஆனால் ஒன்றிய அரசு உச்சநீதி மன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தாக்கல் செய்யாமல் மேலும் காலதாமதம்படுத்தும் வகையில் மீண்டும் ஒரு ஆணையத்தை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி K. G. பாலகிருஷ்ணன் தலைமையில் அமைத்து இந்த பிரச்சனையைப்பற்றி ஆய்வு அறிக்கை தரும்படி 2 ஆண்டுகள் காலக்கெடு கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே 2005ல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட ‘ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான ஆணையம் இந்த பிரச்சனையை ஆய்வு செய்து தலித் கிறிஸ்தவர்களுக்கும் SC உரிமை வழங்கப்பட வேண்டுமென்றும், அப்படி வழங்க ஒன்றிய அரசு மறுப்பது அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது எனவும் வலியுறுத்தி அறிக்கையை 2007ல் சமர்ப்பித்தது. ஆனால் இன்றைய ஒன்றிய அரசு இந்த அறிக்கையை ஏற்க மறுக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பது தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

ஆகவே, முதல்வர் அவர்களுக்கு ஒட்டுமொத்த தலித் கிறிஸ்தவர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.
இந்தி தீர்மானம் நிறைவேற பேராதரவு அளித்த தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கட்சி தலைவர்கள், மாண்புமிகு K S. மஸ்தான் சிறுபான்மை நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் S. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் M. சிந்தனைச்செல்வன், K. செல்வப்பெருந்தகை, S. இனிகோ இருதயராஜ், M. H.ஜவாஹிருல்லா, G. K. மணி, V. P. நாகை மாலி, T. ராமச்சந்திரன், T. வேல்முருகன், E. R. ஈஸ்வரன் மற்றும் ADMK கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் மற்றும் சில மாநில சட்ட பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட இதற்கான தீர்மானங்களின் அடிப்படையில் ஒன்றிய அரசு தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின்(DCEM) சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த மார்ச் 28 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நேஷ்னல் கவுன்சில் அஃப் தலித் கிறிஸ்டியன்ஸ் (NCDC) நடத்திய ஆர்பாட்டத்தில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட தலித் கிறிஸ்தவர்கள், ஒன்றிய அரசு 2024 மக்களவை தேர்தலுக்கு முன் இந்த SC உரிமையை அவர்களுக்கு தரவேண்டுமென ஓர் அரசியல் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


