
மாணவர்கள் தவறான பாதையில் செல்வது இப்போது மட்டுமல்ல பல காலமாகவே இருந்து வருகிறது என பள்ளிகல்வி துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார்.
க்ரை(CRY – Child Rights and You) என்ற தனியார் அமைப்பின் மூலம் பெண் குழந்தைகளின் கல்வி குறித்தான விழிப்புணர்வு நடைபயணம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறையின் செயலாளர் மதுமதி, நடிகை ராஜலட்சுமி, இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் என 100- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், நடனங்கள் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, குழந்தைகள் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு உயர்கல்வி பயில வேண்டும் என்ற பதாகைகளை ஏந்திக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் மதுமதி, “க்ரை அமைப்பு சார்பாக பள்ளிக் குழந்தைகள் உயர்கல்வி பயில வேண்டுமென ஒரு நடை பயணம் நடைபெற்றது. இந்த நடைப்பயணத்தில் பெண்கள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டம் மூலம் கல்வி வளர்ந்து வருகிறது. பள்ளி மாணவிகள் அனைவரும் மேற்படிப்புக்கு கல்லூரி செல்ல வேண்டும் என்பது அரசின் நோக்கம். தமிழகத்தில் தான் மேற்படிப்பு செல்லக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.” என்றார்.
மேலும், பள்ளி மாணவர்கள் ஆசிரியர் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆசிரியர் தாக்குதல் என்பது அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக உள்ளது. பரவலாக உள்ளது என்று எதுவும் கூற முடியாது. இந்த காலத்தில் மட்டுமே மாணவர்கள் இதுபோன்று இல்லை; எல்லா காலத்திலும் மாணவர்கள் இது போன்று தான் உள்ளார்கள். 100 மாணவர்களில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள்தான் இது போன்ற உள்ளார்கள். அந்த மாணவர்களை அணுகுவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அந்த மாணவர்களை மட்டும் ஆசிரியர்கள் அன்பால் தான் அணுக வேண்டும்.
கோல் எடுத்தால் குரங்காடும் என்ற பழமொழி ஒரு காலத்தில் இருந்தது. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் யாரும் கோல் எல்லாம் எடுக்க முடியாது. சாதாரண முறையில் தான் ஆசிரியர்கள் மாணவர்களை அனுகி வருகின்றனர். பள்ளி மாணவர்களை நல்வழியில் கொண்டு செல்ல பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தவறான பாதையில் செல்லும் மாணவர்கள் ஒரு சில மாணவர்கள் மட்டும் தான், அதிகப்படியான மாணவர்கள் நல்ல பழக்கங்களை கொண்டுள்ளனர். அதனால் தான் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மாணவர்களுக்கு கெட்ட பழக்கங்கள் சமூக வலைதளங்களில் பரவி விடக்கூடாது. அது போன்று பரவுவதால் தான் அது ஒரு முன் உதாரணமாக இருக்கிறது. ஆசிரியர்கள் குறித்து தவறான தகவல்களை அளிப்பது மன வேதனை தருகிறது.” என்று கூறினார்.