Homeசெய்திகள்தமிழ்நாடுமாநில அரசு, இயற்கை வடிகாலினை அடைப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்பதா? - சீமான் அரசுக்கு கேள்வி

மாநில அரசு, இயற்கை வடிகாலினை அடைப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்பதா? – சீமான் அரசுக்கு கேள்வி

-

சீமான் - என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்..

மாநில அரசு, இயற்கை வடிகாலினை அடைப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்பதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மதுரவாயல் – சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் அபாயகரச் செயலை ஒன்றிய மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். திட்டமிடப்பட்டுள்ள மேம்பாலம் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை கூவம் ஆற்றின் மேல் 15 கி.மீ.க்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆற்றில் கற்களைக் கொட்டிப் பாதை அமைப்பது கட்டாயம் என்றும், இத்திட்டம் தேச நலன் சார்ந்தது என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காரணம் சொல்வது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. சென்னை மாநகரின் இயற்கை வடிகால்களாக இருக்கக்கூடிய ஆறுகளை அடைத்துவிட்டால், கடந்த பெருமழையின்போது சென்னை மாநகருக்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பினைப் போல பல மடங்கு பாதிப்புகள் எதிர்காலத்தில் நேரும்.

ஏற்கனவே கூவம் ஆறானது உயிர்கள் வாழத் தகுதியற்று “இறந்துவிட்ட நதி”யாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்த நிலையில், ஆற்றினை மொத்தமாக அடைத்துவிடக்கூடிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை சூழலியல் குறித்த எவ்வித அக்கறையும் புரிதலுமற்ற செயலாகும். வெள்ள பாதிப்பின்போது நிவாரணம் அளிக்காத ஒன்றிய அரசு, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை மட்டும் அளிக்கிறதா? பெருமழையை தாங்கக்கூடிய வடிகால் அமைக்காத மாநில அரசு, இயற்கை வடிகாலினை அடைப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கிறதா?

தமிழ்நாட்டு வளங்களை எளிதாகவும் விரைவாகவும் ஏற்றுமதி செய்து பன்னாட்டு முதலாளிகளின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் திட்டத்தால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உடனடியாக இச்செயலை நிறுத்தி, பாதை அமைத்துக் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளையும், கற்களையும் அகற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பெருமழைக்கு மக்களை பலியாக்கிடும் இத்திட்டத்தை கைவிடாவிடில் ஒன்றிய மாநில அரசுகள் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ