22 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்
22 தமிழக மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களுக்கும் 5ஆம் தேதியான இன்று வரை சிறைகாவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மீனவர்களின் சிறைகாவல் தண்டனை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் முறையாக மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்ற நீதிபதி, தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் கூடிய விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து, அங்குள்ள துணை தூதரக அதிகாரிகள் உதவியுடன் மீனவர்கள் ஒரு சில தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமநாதபுரம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் கைதாகினர் என்பது குறிப்பிடதக்கது.