கச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்ற 12 மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு – நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களும், தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதால் மீனவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.


