பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
மீஞ்சூர் அருகே பழங்குடியின இளைஞர் குடும்ப தகராறு காரணமாக அரசு பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் இருளர் காலணியை சேர்ந்தவர் மணிகண்டன் (19). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் அவ்வப்போது குடித்துவிட்டு மதுபோதையில் தமது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வழக்கம்போல் தமது குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்ட மணிகண்டன் வீட்டில் இருந்து சென்று விட்டார். இதனிடையே இன்று காலை நந்தியம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் மணிகண்டன் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் பழங்குடியின இளைஞர் பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.