திருக்குறன் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து இரண்டு நாட்கள் நடைபெறும் 2- ஆவது “திருக்குறள் மாணவர் மாநாட்டினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பள்ளி மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள், தமிழ் பண்பாட்டு ஓவியக் கண்காட்சி,மாணவர்களுக்கு மொழியாற்றலும், சமூக உணர்வும் மேம்படுத்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மற்றும் பல போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
“தீராக் காதல் திருக்குறள்” திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கும் “திருக்குறள் 2 வது மாணவர் மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இம் மாநாடு பள்ளி மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று காலை துவங்கியது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாநாட்டினை துவக்கி வைத்தார். இம்மாநாட்டிற்கு, அமைச்சர்கள் திரு.தங்கம்தென்னரசு திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இம்மாநாட்டில் தமிழ் பண்பாட்டு ஓவியக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது. இதில்,சேலத்தைச் சேர்ந்த அரசு மாதிரிப் பள்ளி மாணவி கீர்த்தி மாலினி தமிழ் வட்டெழுத்துக்களினால் 1330 திருக்குறளினால் உருவாக்கியிருந்த திருவள்ளுவர் உருவப் படம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இம்மாநாட்டில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள மாணாக்கர்கள் தேர்வு செய்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு மொழியாற்றலும், சமூக உணர்வும் மேம்படுத்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், பேச்சுப்போட்டி, சிறுகதை எழுதுதல் போட்டி, கவிதை எழுதுதல் போட்டி உள்ளிட்ட தனிநபர்களுக்கான போட்டிகளும், நடனம், நாடகம், பாவனை நாடகம், வினாடிவினா, திருக்குறள் விவாத மேடை உள்ளிட்ட குழுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, இந்த மாநாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாளை திருக்குறள் விவாத மேடை நிகழ்ச்சியை ஊடகவியலாளர் திரு. கார்த்திகைச் செல்வன் நடத்துகிறார்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் அழகே தமிழே என்ற தலைப்பிலும், திரு.ஆர்.விஜயாலயன் அவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டல் என்ற தலைப்பிலும், பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் திரு.முத்துக்குமரன் அவர்கள் தமிழும் நானும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும், மதுரை மேஸ்ட்ரோ சைமன் இன்னிசைக் குழுவினரின் தமிழ்-திரையிசை பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கப்பலை வைத்து சோதனை நடத்த திட்டம்