திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள ராட்சத பாறையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை கோயில் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலையார் காப்புக்காடு மலைப் பகுதியில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி ஃபெஞ்சால் புயல் காரணமாக பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் ஒரு வீடு மண்ணில் புதைந்ததில் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் மண் சரிவில் உருண்டு வந்த பாறையை அகற்றும் பணிகளுக்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் திருச்சியில் இருந்து பாறைகளை அகற்றும் குழு வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் சுமார் 50 டன் எடை கொண்ட பவர் டில்லர் இயந்திரத்தை பயன்படுத்தி பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராக் கிராக் என்று சொல்லக்கூடிய அமிலத்தை பயன்படுத்தியும் பாறைகளை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணியில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாறைகளை அகற்றும் பணி 5 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், பாறைகளை உடைக்கும் பணியின் போது பாறைகள் உருண்டு வராமல் இருப்பதற்காக இரும்பு தகடுகள் போடப்பட்டு வருகிறது.மேலும் அந்த பகுதியில் ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு, தற்காலிகமாக மாற்று குடியிருப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் பட்டா இன்றி வசிப்போரின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது