
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து, பணம், செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக, விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
“மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் நிறைவுப் பெறும்”- மேயர் பிரியா பேட்டி!
நெல்லை மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை வேளையில், ஒரு சிலர் கும்பலாக அமர்ந்து, மது அருந்திக் கொண்டும், கஞ்சா புகைத்துக் கொண்டும் இருந்திருக்கின்றனர். அப்போது, அந்த வழியே வந்த இரண்டு பட்டியலின இளைஞர்களை அந்த கும்பல் வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவர்களிடம் சாதி பெயரைத் தெரிந்துக் கொண்டு, அவர்களை நிர்வாணப்படுத்தித் தாக்கியதாகவும் தெரிகிறது. மாலை முதல் நள்ளிரவு வரை தாக்குதல் தொடர்ந்ததாக, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகின்றனர். தங்களை நிர்வாணப்படுத்தியதுடன், தங்கள் மீது சிறுநீர் கழித்த கொடுமையையும், அந்த இளைஞர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூபாய் 5,000 பணம் உள்ளிட்டவற்றையும் போதைக் கும்பல் பறித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர், பட்டியலின இளைஞர்கள் இருவரும், நிர்வாணமாகவே தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், ஆறு நபர்களை கைது செய்துள்ளனர்.