அப்படி என்ன கேள்வி கேட்டார் அந்த இளைஞர்? பத்திரிகையாளர்கள் இதனை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியதால் பரபரப்பு.
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் இளைஞர் ஒருவர், செமிகன்டக்டர் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக அடுத்தடுத்து கேள்வி கேட்டதினால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆவேசமடைந்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் ஊஞ்சபாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கிளம்பிய போது, திருமண மண்டபத்திற்கு அருகே உள்ள பொதுமக்களின் வீட்டிற்கு சென்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தமைக்காக உறுப்பினர் அட்டையை வீட்டின் திண்ணையில் அமர்ந்து வழங்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பும் நேரத்தில், அருண் சந்திரன் என்ற பட்டதாரி இளைஞர் நிர்மலா சீதாராமனிடம் செல்போன் உதிரி பாகமான செமிகண்டக்டர் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன் கோவமாக அந்த இளைஞரிடம் இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு, அதன்பின் டெல்லி வந்து சந்தித்து நேரடியாக விவாதம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
மீண்டும் அந்த இளைஞர் தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்க முயன்ற போது கோபம் அடைந்த நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார். பிறகு அந்த இளைஞரை இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் அந்த இளைஞரை அழைத்துச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.