பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான வார்த்தை மோதல் விரைவில் சரியாகி விடும் என்றும், இதனால் கட்சியில் பிரச்சினை ஏற்படாது என்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார்.

பாமக எம்எல்ஏ அருள், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் என கூறுவது தவறு. பாமக தலைவர் அன்புமணியின் பனையூர் அலுவலகம் என்பது தமிழகம் முழுவதும் உள்ள பாமக நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அலுவலகம் தானே தவிர. அது புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் இல்லை. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுதான் உள்ளது. கருத்து முரண்பாடு இல்லை. பாமகவை நிறுவியவர் மருத்துவர் ஐயா, அக்கட்சியை வழிநடத்துவர் அன்புமணி. இவர்களுக்கு இடையே எந்தவித சச்சரவுக்கும் இடமில்லை. பாமக ஒரு குடும்பமாகத்தான் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.5 கோடி வன்னிய சமூக மக்களுக்கும், அனைவரையும் ஒருங்கிணைந்து செயலாற்றும் ஒரு இயக்கம் பாமக. சதாரண வீட்டில் பிறந்த என்னையும், அழகிய பாஸ்கரையும் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர்தான். இன்று அவர்களுக்குள் நடைபெற்றது ஒரு சலசலப்புதான். இன்று மாலைக்குள் அனைத்தும் சரியாகி விடும். ராமதாசையும், அன்புமணியையும் ஒருவராகத்தான் நாங்கள் பார்க்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.