கிருஷ்ணகிரி ஆணவக் கொலை- முதலமைச்சர் விளக்கம்
கிருஷ்ணகிரி ஆணவக் கொலை தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை நடந்துள்ளது, இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றார்.

அதற்கு விளக்கம் அளித்து பேசிய மு.க.ஸ்டாலின், சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற கொலை சம்பவங்களை அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மனித நேயத்துடன் தடுக்க முன்வரவேண்டும், கிருஷ்ணகிரி இளைஞர் ஜெகன் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்றுவருவதாக கூறினார். மேலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவதானப்பட்டி அதிமுக கிளை செயலாளர் என முதலமைச்சர் கூறினார்.
முதலமைச்சர் விளக்கம் அளித்த பிறகு அதிமுகவினர் பேச முற்பட்டதால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.