தமிழ் வார விழாவின் நிறைவு விழாவில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிசுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதியிலிருந்து ஒரு வார காலம் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு முழுவதும் கலை இலக்கியம் உட்பட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தமிழ்வார நிறைவு விழா நடைபெற்றது. முதலாவதாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக பாவேந்தரின் எழுச்சி பாடல்கள் பாடப்பட்டது. இரண்டாவதாக தமிழ் அமுது நடன நிகழ்ச்சி, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர் நிகழ்த்தினர்.
மூன்றாவதாக சங்கே முழங்கு மாபெரும் நடன நிகழ்ச்சி அனர்த்தனா குழுவினர் முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் கடந்த நான்காண்டுகளில் 32 அறிஞர்களின் 1442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 3 கோடியே 79 இலட்சம் 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது.
இவ்வரிசையில், இந்த ஆண்டு மறைந்த தமிழறிஞர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10.00 இலட்சம் வீதமும் வாழும் தமிழறிஞர்களான கோதண்டம், புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 இலட்சம் வீதம் முதலமைச்சரால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், செயலாளர்கள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு