spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னைக்கு அண்ணா சாலை ... கோவைக்கு அண்ணா மேம்பாலம்!

சென்னைக்கு அண்ணா சாலை … கோவைக்கு அண்ணா மேம்பாலம்!

-

- Advertisement -

தமிழ்நாடு என பெயரிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாலமாக இருந்த பேரறிஞர் அண்ணா பெயரை , கோவை வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் பிரமாண்ட மேம்பாலத்துக்கு, “பேரறிஞர் அண்ணா மேம்பாலம்” என பெயரிட கோவை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.சென்னைக்கு அண்ணா சாலை ... கோவைக்கு அண்ணா மேம்பாலம்!

பொதுமக்களின் பயன்பாட்டுக்குட்பட்ட பொது இடங்கள், மேம்பாலங்கள், சாலைகள், பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களை சூட்டுவது வழக்கம். தமிழ்நாட்டிற்கு பெரும் வளர்ச்சியையும், புகழையும் தேடித் தந்த தலைவர்களை நினைவு கூறும் வகையிலும், தியாகிகளின் சமூக பணிகளை போற்றும் வகையிலும், இதுபோன்று பெயர் சூட்டுதல் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தியாகிகள் மற்றும் தலைவர்களின் பெயர்களை பொது இடங்களுக்கு சூட்டுவதன் வாயிலாக, அவர்களின் சமூக பங்களிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தி, வளரும் தலைமுறையை சமூக பொறுப்புடன் அரசியல்படுத்தி வளர வழிவகை செய்கின்றன.

we-r-hiring

அந்த வகையில், கோவை அவிநாசி சாலையில் 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள, பிரமாண்ட மேம்பாலம் விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில், இந்த மேம்பாலத்துக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டி, “பேரறிஞர் அண்ணா மேம்பாலம்” என அழைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள மிக நீண்ட தூர பாலங்களில் ஒன்றான இந்த பாலத்திற்கு, பேரறிஞர் அண்ணா பெயரை சூட்டுவதன் வாயிலாக, அவரையும் அவரின் செயல்பாடுகளையும் பலரும் நினைவு கூற இயலும் என கோவையை சார்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில், தனித்துவமான மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் பேரறிஞர் அண்ணா . 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டின் வளர்ச்சியை, 1967 காலத்திற்கு முன்பு 1967 க்கு பின்பு என இரண்டாகப் பிரிக்கும் அளவிற்கு, நவீன தமிழ்நாட்டை கட்டமைக்க அடித்தளம் இட்டு இருக்கின்றார். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி, சமத்துவம் சகோதரத்துவம் மனிதத்தை வலியுறுத்தும் வகையில், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என முழங்கி, அனைத்து தரப்பையும் ஒரு புள்ளியில் இணைத்தவர் பேரறிஞர் அண்ணா.

மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என எதிர்தரப்பில் உள்ளவர்களை மதிக்கும் பன்பை போதித்தவர் அண்ணா. அது மட்டுமின்றி மாநில சுயாட்சி, மொழி உணர்வு, பொதுவெளியில் சமதர்ம சமூகம் உள்ளிட்டவற்றில் திடகாத்திரமாக களப்பணியாற்றிய பேரறிஞர் அண்ணா, உலக அளவில் தமிழ்நாடு மொழி உணர்விலும், கல்வி அறிவிலும், பொருளாதாரத்திலும் மேலோங்குவதற்கு அடித்தளமாக இருந்திருக்கின்றார். இவரின் சமூக செயற்பாடுகள் தற்காலத்தில் நினைவு கூர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கோவையின் பிரபலமான கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், டைடல் பார்க், மென்பொருள் நிறுவனங்கள், விமான நிலையம், சென்னை பெங்களூர் மார்கம் என அனைத்துக்குமான பயணத்துக்கு இந்த பாலம் பெருமளவில் உதவ இருக்கின்றன. அதன் அடிப்படையில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பல் சமய வழிபாட்டுத் தலங்கள் என பலவற்றை உள்ளடக்கியவைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டுகின்ற இந்த மேம்பாலத்திற்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா பெயரை சூட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னையின் அடையாளமாக அண்ணாசாலை அழைக்கப்படும் நிலையில், கோவையின் அடையாளமாக அண்ணா மேம்பாலம் அமைய வேண்டும் என விரும்புகின்றனர்.

தென்னிந்தியாவின் பிரமாண்ட பாலமான இந்த பாலத்துக்கு, தென்னாட்டு பெர்னாட்சா என்றழைக்கப்படும் பேரறிஞர் அண்ணா பெயரை சூட்டு கோருவது பொறுத்தமானதாகவும், வரவேற்க தக்க எதிர்பார்ப்பாகவும்  அமைந்திருக்கின்றன.

ஆகஸ்ட் 15 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்க பாஸ் அறிமுகம்!

MUST READ