“டாஸ்மாக்” தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையை தொடர்ந்து மே மாதம் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய போது அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், மே மாதம் இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 4 வார காலத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை அதுவரை தொடரும் என உத்தரவிட்டனர். முன்னதாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, அமலாக்கத்துறை விவகாரத்தில் நீதிமன்றம் ஏதேனும் சொல்ல முற்பட்டால் மத்திய அரசின் சொலிசிட்டார் ஜெனரல் அமலாக்கத்துறைக்கு எதிரான தேவையில்லாத கருத்துக்களை நீதிமன்றம் கூறுவதாக தெரிவிப்பார் என கருத்து கூறினர். அதற்கு, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு எதிராக தெரிவிக்க கூடிய ஒவ்வொரு கருத்துக்களும் ஊடகத்தில் மட்டுமல்லாமல் நீதித்துறை அலுவலர்கள், கீழமை நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் மத்தியிலும் வேகமாக பரவுகிறது என தெரிவித்தார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் எந்த ஒரு நபரையோ அல்லது அமைப்பையோ தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை! மாறாக வரக்கூடிய வழக்கின் தன்மையை பொறுத்து அதில் இருக்கக்கூடிய சாராம்சங்களை பொறுத்து நாங்கள் கருத்துக்களை சொல்கிறோம். மேலும், யாரையும் குறிப்பிட்டு விமர்சனங்களையோ கருத்துக்களையோ வைக்க வேண்டும் என்பது எங்களது எண்ணம் கிடையாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.