சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்து சேவை தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் குறித்து பேசிய மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன், “மெட்ரோ 2ம் கட்ட வழித்தடத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கி.மீ.க்கு நடைபெறுகிறது. பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இதே போன்று போரூர் – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையேயும் கோயம்பேடு முதல் நத்தம்பாக்கம் வர்த்தக மையம் இடையேயும் 2-ம் கட்ட மெட்ரோவின் மற்றொரு சேவை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
பூந்தமல்லி – போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் உயர்மட்ட பாதையாக அமைக்கப்பட உள்ளது. மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தடத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 6 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
