கரூர் சம்பவம் குறித்து அரசுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா்.கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அரசுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலேயே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக மாரிதாஸ் தனது வலைதள பக்கத்தில், “இன்று மாலை, நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியாகும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன – மாலை 6 மணிக்கு..” என்று பதிவிட்டிருந்தார். மேலும், விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுருந்தாா். அந்த பதிவுக்குப் பின் சில நிமிடங்களிலேயே, ”என் இல்லத்திற்கு காவல் துறை கைது செய்ய வந்துள்ளது.” என்றும் ட்வீட் செய்திருந்தார். இதற்கிடையில் அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில், குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், “கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காணொளிகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்த வழக்கில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனைத்தையும் தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.
கரூர் சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் கண்மூடி பார்க்காது. பொறுப்பை யாரும் தட்டிக்கழிக்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்தார். பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கட்சித் தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களுக்கு தலைமைத் தன்மை இல்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்காதது கண்டனத்துக்குரியது.” எனவும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், இது விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிடுவதாக அறிவித்திருந்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், கரூர் சம்பவத்தைச் சுற்றியுள்ள வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (38), தவெக மாங்காடு உறுப்பினர் சிவனேசன் (36), அதே கட்சியின் ஆவடி வட்டச் செயலாளர் சரத்குமார் (32), யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டோரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது அந்த வரிசையில் மாரிதாஸும் இணைந்துள்ளார்.
‘பைசன்’ படத்தில் நடிக்க விக்ரமிடம் பேசினேன்…. ஆனா அவர்…. மாரி செல்வராஜ் பேட்டி!