பழைய அடிமைகள் போதாது என புதிய அடிமைகளை பாஜக வலை வீசி தேடி வருவதாகவும், கொள்கையற்று உருவாகும் இளைஞர் கூட்டத்தை கொள்கையில் மையப்படுத்தும் பொறுப்பு எல்லோரை விட நமக்கு இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் முத்தமிழ் பேரவை அரங்கில் பெரியாரியல் அறிஞர் தோழர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று நூற்றாண்டு மலரை வெளியிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பெரியார் தொண்டனாக, மாணவனாக இந்த நிகழ்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் பேரனாக மட்டும் இல்லாமல், பெரியார், அண்ணா, ஆனைமுத்து கொள்கை பேரனாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன் என்றார்.
மேலும், பெரியார் கொள்கை பணிக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்தவர் ஆனைமுத்து என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் ரவி நம்முடைய நண்பர் தான். பாசிச பாஜகவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக நினைத்து நமக்கு செய்து கொண்டிருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்பாக நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு யாருடன் போராடும், யாரை எதிர்த்து போராடும் என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ரவி அவர்களே உங்களோடுதான் தமிழ்நாடு போராடும். மாநில உரிமைக்காக தமிழ்நாடு போராடும். சமூக நீதிக்காக தமிழ்நாடு என்றும் போராடும், மத சாதி வெறியை எதிர்த்து தமிழ்நாடு போராடும், இந்திய எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடும். ஒன்றிய பாசிச பாஜகவை எதிர்த்து என்றும் தமிழ்நாடு போராடும் என்று கூறினார். ஆளுநர் ரவி தமிழ் கற்க முயற்சி செய்வதாக கூறியிருக்கிறார். காரணமே தமிழ்நாடு போராடியது தான். அன்று தமிழ்நாடு போராடாமல் இருந்திருந்தால், ஆளுநர் தமிழ் கற்றுக்கொள்ளமாட்டார். நாம் இந்தியில் பேசி இருப்போம் என்று கூறினார்.
இந்தி திணிப்புக்கு எதிரான உணர்ச்சியை முதலில் தொடங்கியவர் பெரியார். அன்று தொடங்கி இன்று வரை இந்தியை திணிக்க ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி செய்தனர். மற்றவர்கள் அனைவரும் ஏற்றுகொண்ட நேரத்தில் தமிழக முதல்வர் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நமக்கான நிதியை தர மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறினார். 2500 கோடி அல்ல; பத்தாயிரம் ஆயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என கூறி சட்ட போராட்டம் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். இது பெரியாருக்கான வெற்றி.
தந்தை பெரியார் தமிழகத்தை பக்குவப்படுத்தி வைத்துள்ளார். இதனால்தான் பாஜகவின் எந்த ஒரு தில்லு முள்ளும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஈடுபடவில்லை. அதனால்தான் அதிமுகவை மிரட்டி அவர்கள் தோள்மீது ஏறி இங்கு சவாரி செய்கின்றனர்.பழைய அடிமைகள் போதாது என புதிய அடிமைகளை வலை வீசி பாஜக தேடி வருகிறது. எத்தனை புது புது அடிமைகளோடு பாஜக வந்தாலும், தமிழ்நாடு சுயமரியாதை மண் என 2026 சட்டமன்ற தேர்தல் மீண்டும் முடிவு செய்து அவர்களுக்கு நிரூபித்து காட்டும் என்றார்.
அதிமுக கட்சியை வாடகைக்கு எடுத்து, தற்போது அந்த கட்சியை உள் வாடகைக்கு விட்டுள்ளார் ஈபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்று தெரியாது. கார் மாறி சென்றால் கூட பரவாயில்லை விழுகிற காலையும் மாற்றி விழும் நபர்தான் ஈபிஎஸ். பெரியார் எப்போதும் வெல்வார், அதேபோல தமிழ்நாடு எப்போதும் வெல்லும்.ஈரோடு பாதையில் நடைபோடுவதால்தான் இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு உள்ளது. பெரியார் சிந்தனையாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி.
வெளியே செல்லும் போது பலர் என்னுடன் செல்பி எடுப்பார்கள். அப்போது செல்பியை விட self respect தான் முக்கியம் என்று செல்வேன். கொள்கையற்ற ஒரு இளைஞர் கூட்டம் தற்போது உருவாகியுள்ளது. அவர்களை கொள்கை மையப்படுத்தும் பொறுப்பு எல்லோரை விட நமக்கு உள்ளது. எனவே தொடர்ந்து பெரியார் குறித்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் சிவசங்கர், சுப.வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட பெரியார் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறப்பு


