தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடைபெற்ற சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையாகி இருக்கின்றன.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இந்த சந்தையில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க அதிகளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், வருகின்ற 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இன்று அய்யலூரில் சந்தை கூடியது. அதிகாலை 3 மணி முதல் ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் வியாபாரம் களைகட்டியது. கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் போதாததால் சந்தைக்கு வெளியே சர்வீஸ் சாலை முழுவதும் கூட்டம் அலைமோதியது.

வியாபாரிகள் போட்டிபோட்டு கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றி சென்றனர். இன்று 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.8,500 வரையிலும் செம்மறியாடு ரூ.8,000 வரையிலும், 1 கிலோ நாட்டுக்கோழி ரூ.450 வரையிலும் சண்டைக்கு பயன்படுத்தும் கட்டு சேவல் அதிகபட்சமாக ரூ,15,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அய்யலூரில் இன்று நடைபெற்ற சந்தையில் ஒரு நாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
2 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சா பறிமுதல்!! மடக்கி பிடித்த போலீஸ்…