
கரூர் கூட்ட நெரிசலில் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களை வழங்கக்கோரி தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரி சம்மன் வழங்கியுள்ளனர்.

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் உள்ளூர் போலீசார் மற்றும் எஸ்.ஐ.டி விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தி வரும் நிலையில், முதல் கட்ட விசாரணையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணை நடைபெற்று வந்தது.
இரண்டாம் கட்ட விசாரணையில் பல்வேறு நபர்களுக்கு சிபிஐ கூடுதல் எஸ்.பி முகேஷ் குமார் அனுப்பிய சம்மன் அடிப்படையில், கரூர் சுற்றுலா மாளிகையில் அப்பகுதி பொதுமக்கள், கடை உரிமையாளர், வீடியோகிராபர் உள்ளிட்ட 4 பேர் ஆஜராகினர். தொடர்ந்து இன்றைய தினம் சுமார் 36 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 15க்கும் மேற்பட்டவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் சிபிஐ SP பிரவீன் குமார் தலைமையிலான 12 பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.

விசாரணைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், முதலாவதாக 3d லேசர்ஸ் ஸ்கேனர் அளவீட்டு கருவி கொண்டு குற்றம் நடந்த இடத்தில் அளவீடு செய்தனர். இந்த லேசர் ஸ்கேனர் அளவீட்டு கருவியானது குற்றம் நடந்த இடத்தையும், நேரத்தையும் துல்லியமாக கணக்கிடும் வகையில் விசாரணைக்கு உதவும் என்று கூறப்படுகிறது. 3d மேப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது .
இந்நிலையில் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரி சுமார் 1.20 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கரூர் கூட்ட நெரிசலில் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களை வழங்கக்கோரி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணைக்குப் பின்னர் அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார் ,
அப்போது அவர் கூறியதாவது, “சிசிடிவி காட்சிகள் உட்பட பொதுவான ஆதாரங்களை கேட்டுள்ளனர். அதனை ஓரிரு நாளில் கொடுத்து விடுவோம். கலந்து கொண்டவர்களின் விவரம் சிசிடிவி காட்சிகள் உட்பட சில விவரங்களை பட்டியலிட்டுள்ளனர். அதை வழங்குவதற்கான சம்மன் வழங்க வந்துள்ளனர். தகவல்கள் மட்டுமே கேட்டுள்ளனர். ஏற்கனவே தமிழக காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்ட தகவல்களையும் அளித்திருந்தோம். அதே தகவல்களை சிபிஐ கேட்டுள்ளது, அதையும் வழங்குகிறோம் என தெரிவித்து இருக்கிறோம்.
எங்களை ஆஜர் ஆகுவதற்கு எந்த சம்மனும் இதுவரை வரவில்லை. வந்தால் நாங்கள் ஆஜராகி நேரில் விளக்கம் அளிப்போம். அவர்களுடைய முதற்கட்ட விசாரணைக்கான தேவைப்படும் விவரங்களை கேட்டுள்ளனர். அதை மூன்று நாட்களில் வழங்குவோம்” என்று தெரிவித்தார்


