தினமும் 30 நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வதால் உடலில் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்துமா..? அதன் அவசியத்தை தெரிஞ்சுக்கோங்க…
இன்றைய அவசரமான காலக்கட்டத்தில், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதற்கு பலருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது. ஆனால் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அவசியமான உடற்பயிற்சி எது என்று கேட்டால், அது நடைப்பயிற்சி தான். ஜிம் கட்டணம், விலை உயர்ந்த கருவிகள் அல்லது பயிற்சியாளர் இல்லாமல் செய்யக்கூடிய எளிமையும் பலன்களும் நிறைந்த ஒரு உடற்பயிற்சிதான் இது. நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் வேகமாக நடப்பதால், இதயத்தையும், எலும்புகளையும் வலுப்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. எடை கட்டுப்பாட்டில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நடைப்பயிற்சி என்பது ஒரு சிறிய பழக்கமாகவே இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் நன்மை தரும் மருந்து” என்றே கூறலாம்.
விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நடக்கும் போது இதயத்துடிப்பு அதிகரித்து, இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது. இதய நோய், பக்கவாதம் போன்ற அபாயங்கள் கணிசமாகக் குறைய உதவுகிறது. நடைப்பயிற்சி இதய தசைகளை வலுப்படுத்தி, உடல் முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. மன அழுத்தம், பதட்டம் போன்றவை இன்று பொதுவான பிரச்சனைகளாக உள்ளன. ஆனால் நடைபயிற்சி “எண்டோர்பின்” எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய்து, மன அமைதியை அளிக்கிறது. வெளியில் சுவாசிக்கும் புதிய காற்று மனதை தெளிவாக்கி, நம்பிக்கையை ஊட்டுகிறது.
வழக்கமான நடைபயிற்சியால், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கிறது. மூட்டு வலி அல்லது விறைப்புடன் போராடுபவர்களுக்கும் இது சிறந்த பயிற்சி. அதே சமயம், உணவுக்குப் பிறகு, சிறிது நேரம் பயிற்சி செய்வதால், செரிமானத்தையும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நடைபயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நினைவாற்றலையும், கவனத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வயது முதிர்ந்தவர்களுக்கு டிமென்ஷியா போன்ற பிரச்சனைகள் குறைகின்றன. தினம் நடைப்பயிற்சி செய்பவா்கள் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை அடைகிறார்கள் என்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உங்கள் ஆரோக்கியத்திற்காக விலைமதிப்பற்ற முதலீடு ஒன்றைச் செய்ய வேண்டுமெனில், இன்று முதல் தினசரி நடைப்பயிற்சியைத் தொடங்குங்கள். ஒவ்வொரு அடியும் உங்கள் இதயத்துக்கும், மனதிற்கும், மூளைக்கும் ஒரு நன்றி சொல்லும் செயலாகும். நடப்பது எளிது, ஆனால் அதன் நன்மைகள் அளவற்றது.



