கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் இட பிரச்சனை, இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு சீல் வைக்க சென்ற நிலையில் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக் கிணங்க வெண்ணமலை பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்குட்பட்ட கோவில் இடங்களை சீல் வைக்கும் பணியில் இந்து அறநிலை துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு கிணங்க பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடைகளுக்கு சீல் வைக்கும் பணியும், காலியிடங்களுக்கு போர்டு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆலய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை வெண்ணமலை அருகே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் இடம் எனக் கூறப்படும் பகுதிக்கு நடவடிக்கை மேற்கொள்ள சென்று உள்ளனர். அப்பொழுது அங்கிருந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு உள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண்கள் உட்பட மூவர் தாங்கள் வைத்திருந்த மண்ணெய்யை தலையில் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் மீது தண்ணீரில் ஊற்றி பத்திரமாக மீட்டனர். நீதிமன்ற உத்தரவு கிணங்க பல்வேறு நடவடிக்கைகளை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் நிலையில் இது கோவில் இடம் இல்லை, இனாம் இடம் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் சில நாட்களாக உண்ணாவிரதம் மற்றும் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



