பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4 வது வழித்தடத்தில் பூந்தமல்லி- போரூர் சந்திப்பு வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் மெட்ரோ ரயிலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. 90 கி.மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு மெட்ரோ ரயில் பாதை சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கி உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட சோதனை 20ம் தேதி நடைபெற இருப்பதாகவும் நிரந்தர பாதுகாப்பு சான்றிதழ் அப்போது கிடைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


