சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மல்லை.சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எழும்பூரில் நடைபெற்ற திராவிட வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் மல்லைசத்யா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

தமிழகத்தில் மதவாதத்தை எதிர்க்க வேண்டியது அவசியமாக இருப்பதாகவும், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நிலையிலும் சிறப்பாக திமுக அரசு செயல்பட்டதாகவும், அதனால் திமுக அரசு தொடர வேண்டும் என்ற காரணத்தால் வரத் தேர்தலில் திமுக கூட்டணி ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை.சத்யா, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில் அனைத்து தொகுதியிலும் முதலமைச்சர் போட்டியிடுகிறார் என்று தான் அறிவிக்கிறார். எனவே மதிமுக வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பரப்புரை செய்வோம். இதில் எந்த நெருடலும் இல்லை என்று கூறினார்.
அதிமுக கூட்டணிக்கு சென்றது தவறு என வைகோ பேசி இருந்தார். இதை அப்போதே நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். திமுக தான் தமிழகத்தின் தற்போதைய நம்பிக்கை. எங்கள் கருத்தை நிராகரிக்கும் விதமாக வைகோ இன்று பேசி இருக்கிறார். குறைந்த வாக்குகள் இருந்தாலும், அவை திமுகவுக்கு தேவையான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றாா்.
வைகோ எப்போதும் நலமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவர் முத்திரை பதித்தது போல், தமிழகத்திற்கு கவனம் செலுத்தி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முத்திரை பதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


