12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதாக உழைப்பாளர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “12 மணிநேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பிறகும் சிலர் அவதூறு பரப்புகின்றனர். மசோதா திரும்பப் பெறப்படுவது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். திமுக அரசு கொண்டுவந்த மசோதாவாக இருந்தாலும், திமுக தொழிற்சங்கமே அதனை எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக எத்தகைய ஜனநாயகம் மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. விட்டுக்கொடுப்பதை நான் என்றும் அவமானமாக கருதவில்லை, அதனை பெருமையாக கருதுகிறேன். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான்” எனக் கூறினார்.

மசோதாவை நிறுத்திவைப்பதாக ஏப்ரல் 24 ஆம் தேதி அறிவித்த நிலையில் மே தினமான இன்று திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின அறிவித்துள்ளார்.