சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வடபழனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகதாஸ் (45), பட்டதாரி. அவர் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். 2024-ஆம் ஆண்டு, கிண்டியில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் நடத்தி வந்த ஜெரால்டு (50) என்பவர், நண்பராக முருகதாஸிடம் அறிமுகமானார்.
அப்போது, “கனடாவில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன்” என ஜெரால்டு கூறியதை நம்பிய முருகதாஸ், மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.5 லட்சம் பணத்தை வழங்கியுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காத நிலையில், பணத்தையும் திருப்பி தராமல் ஜெரால்டு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென ஜெரால்டு தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகதாஸ், வடபழனி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ஜெரால்டை தீவிரமாக தேடி வருகின்றனர்.
