சேலம் ரயில்வே கோட்டத்தில் எவ்வித காரணமும் இல்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக அபாச சங்கிலி வசதி வழங்கப்பட்டுள்ளது. தேவையின்றி இந்த சங்கி்லியைப் பிடித்து இழுப்பவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 141ன் கீழ் தேவையின்றி அலாரம் செயினை இழுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதனிடையே கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 57 முறை அபாய சங்கிலி இழுக்கப்பட்டுள்ளன.
இதில் விசாரணைக்கு பிறகு 42 சம்பவங்கள் எந்தவிதமான நியாயமான காரணமும் இன்றி நடந்ததாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட பயணிகள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல்படுக்கைக்கு ஏற முயற்சிக்கும் போது சிலர் தவறுதலாக அலாரம் செயினை இழுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும், இதனைத் தடுக்க ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களுக்குள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தேவையின்றி அலாரம் செயினை இழுப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
